இன்றைக்கு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ
வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன்
விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது.
ஆன்லைனில் விளையாடும் இந்த விளையாட்டால் கடந்த 3 ஆண்டுகளில் ரஷ்யாவில் மட்டுமே
130 பேர் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனா, அர்ஜென்டினா
உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்த விளையாட்டு, தற்போது
இந்தியாவிலும் விபரீதம் காட்ட ஆரம்பித்திருக்கிறது
கடந்த இரு மாதங்களில் புளூ வேல் விளையாட்டின் காரணமாக தற்போது வரை இந்தியாவில்
6 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. மதுரையைச் சேர்ந்த
விக்னேஷ் (19) இந்த விளையாட்டின் காரணமாக நேற்று காலை தனது வீட்டில்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புளூ வேல் விளையாட்டுக்கு தலைவராக இருந்து பலருக்கு கட்டளைகள்
வழங்கிய ரஷ்யாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு கருதி அவரின் பெயரை போலீஸார் வெளியிடவில்லை.