![]()
வேலூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், சில இடங்களில் அது பரவி வருகிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 5 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வேலூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.