தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இன்று ஏழு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
12,870 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 57,746 பேர் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் 55,337 கட்டுப்பாட்டு இயந்திரம், 1,06,121 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய விடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு அறையில் அடுக்கி வைத்து அந்த அறைக்கு முகவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் உள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் ,முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட இயந்திரம் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அங்குள்ள வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். மேலும், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலமும் சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.