சென்னையில் 111வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, விற்பனையாகி வரும் சூழலில்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வால் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்படலாம்.
அமெரிக்காவின் ரஷியா மீதான பொருளாதாரத் தடை விதிப்பின் எதிரொலியாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை திடீரென உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 111 நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நீடிக்கிறது. பெட்ரோல் ரூ.101.40 ,டீசல் ரூ.91.43 ஆக 111நாட்களாக விலை மாற்றமின்றி உள்ளது.
5 மாநில தேர்தல்கள் முடிவடைந்தவுடன் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உக்ரைனில் ரஷியாவால் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது. நேற்று கச்சா எண்ணெய் விலை 99.38 டாலராக இருந்தது.
இதற்கு முன்பு 2014ம் ஆண்டு பிரெக்சிட் பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலராக அதிகரித்தது. அதன் பிறகு தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ந் தேதி கச்சா எண்ணெய் விலை 82.74 அமெரிக்க டாலராக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.110.04 ஆகவும், டீசல் விலை ரூ.98.42 ஆகவும் இருந்தது. அதன் பிறகு இந்த மாதம் மட்டும் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா முதல் அலையின்போது 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 17ந் தேதி முதல் ஜூன் மாதம் 6ந் தேதி வரை 82 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் பிறகு தற்போது 111 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
உலக அளவில் ரஷியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 10 சதவீதமாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி ஐரோப்பாவில் 3ல் ஒரு பங்காகவும் உள்ளது. இந்த இயற்கை எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் வழியாக குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தியாவை பொருத்தவரை 2021ம் ஆண்டு தினமும் 43 ஆயிரத்து 400 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இது மொத்த இறக்குமதியில் 10 சதவீதம் ஆகும். இதேபோல் 2021ம் ஆண்டு 1.8 மில்லியன் டன் நிலக்கரியும் 2.5 மில்லியன் டன் இயற்கை திரவ எரிவாயுவும் ரஷியாவிடம் இருந்து இறக்குமதியானது.
தற்போது ரஷியாவில் அதிகரித்துள்ள பதட்டத்தால் கச்சா எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சைக்கிள் கால் நடை கலாச்சாரம் மாறி எங்கும் மொபட், மோட்டார் சைக்கிள் கார் ஆட்டோ மயமாகி விட்டது.வீடுகளில் வெந்நீர் போட கூட சமையல் எரிவாயு பயன்படுத்தி வருகின்றனர்.கச்சா எண்ணை விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்தால் மக்கள் பாடு திண்டாட்டமாகிவிடும்.