சென்னை, புழல் சிறையில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஜாமீனில் விடுதலையானார். திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு,சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
இதனால் கடந்த 21ம் தேதியில் இருந்து புழல் சிறையில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் புழல் சிறை முன்பு கூடினர்.ஆனால் சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது எனற விதி உள்ள நிலையில், மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஜெயக்குமார் சிறையில் இருந்து ஜாமீன் வெளியேறினார். சிறையில் இருந்து வெளியேற வந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக தொண்டர்களுக்கு அவருக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். ஜாமீனில் விடுதலையான ஜெயக்குமார், ஐகோர்ட் உத்தரவுப்படி திருச்சியில் 2 வாரம் தங்கி இருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடுகிறார்