உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை கட்டணமின்றி, இலவச விமானங்கள் வாயிலாக மத்திய அரசு மீட்டு விட்டது. கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உக்ரைன் மீதான போர் துவங்கும் முன் மத்திய அரசு, ‘ஆப்பரேஷன் கங்கா’ திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த துவங்கி விட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும்படி சுற்றறிக்கை அனுப்பியது. அவர்களை இலவச விமானங்கள் வாயிலாக, கட்டணமின்றி மத்திய அரசு மீட்டு விட்டது.கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறோம்.
ஆறாவது விமானம் இந்தியா வந்த பின், தமிழக மாணவர்களின் பயண கட்டணத்தை தாம் அளிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். இதுபோன்ற உப்புச் சப்பில்லாத, அலங்காரமான அறிவிப்புகளை வெளியிட கொஞ்சம் கூட குற்ற உணர்வோ, தயக்கமோ அவருக்கு இருந்ததில்லை.மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், தன் திட்டங்களாக அறிவிக்கும் தமிழக அரசு, ஒரு அறிவிப்பு ஆட்சியை மட்டும் நடத்தி கொண்டிருக்கிறது.
மற்றபடி, அவர்களுக்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் இல்லை.மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்ற எதிர்மறை எண்ணமே மேலோங்கி இருக்கிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும், அனைத்து முயற்சிகளுக்கும் தாங்கள் தான் காரணம் என, தி.மு.க., அரசு தம்பட்டம் அடித்து கொள்கிறது.
மத்திய அரசு, மிக அதிகமான மக்கள் நலத் திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறது. இதனால், அந்த திட்டங்களுக்கு, தி.மு.க.,வின் லேபிளை ஒட்டும் வேலையே, தமிழக அரசுக்கு சரியாக இருக்கிறது.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
![உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை கட்டணமில்லா மல் மீட்பு.. பிரதமருக்கு அண்ணாமலை நன்றி.. 1 images 34](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/images-34.jpeg)