வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடும் தீர்த்தவாரியும் இன்று நடைபெற்றது
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் செல்வமுத்துக்குமாரசாமி, நவக்கிரகங்கள் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக பங்குனி உத்திர விழா நடைபெற்றது. முன்னதாக விநாயகர், சுவாமி- அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுவாமி காமதேனு வாகனத்திலும், செல்வ முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில், அம்பாள் அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. வீதியுலா நிறைவடைந்து கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்காரகன் சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பட்டு சாத்தப்பட்டு பிரம்ம தீர்த்தக் குளத்திற்கு பஞ்ச மூர்த்தி சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர் மற்றும் பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
![சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பங்குனி உத்திர விழா .. 1 IMG 20220318 WA0082](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/IMG-20220318-WA0082-1024x576.jpg)