தமிழகத்தில் குறையும் கொரோனா,கேரளத்தில் அதிகரிக்கத்துவங்கியுள்ள கொரோனா எல்கை பகுதியில் வசிக்கும் தமிழக மக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 118 பேர் குணமடைந்து உள்ளனர். மார்ச்18 ல் 61 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் மார்ச் 19 ல் பாதிப்பு 58 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 36,324 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 58 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,334 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,52,31,238 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், எல்லை பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.சென்னையில் கொரோனா தடுப்பு ஊசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களாக, தினசரி கொரோனா தொற்றின் அளவு, 100க்கு கீழ் குறைந்துள்ளது. அதேபோல், இறப்பும் பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில், நேற்று முன்தினம், 847 பேர் பாதிக்கப்பட்டு, 59 பேர் உயிரிழந்து உள்ளனர்.கேரளா – தமிழக எல்லைப் பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான, 13 வழிகள் உள்ளன. மேலும், ஆசிய நாடுகள் அனைத்திலும் பெரிய அளவில் தொற்று வேகமாக பரவி வருகிறது.எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி மட்டும் தான் தொற்றில் இருந்து விடுபட ஒரே தீர்வு.சென்னை ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனத்தில், ஆறு மாதங்களில் 50 மான்கள் வரை இறந்துள்ளன. அங்கிருந்த நாய்களால், மான்கள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆந்த்ராக்ஸ் என்ற கால்நடைகளுக்கு பரவக்கூடிய நோய் காரணமாக, மான்கள் இறக்கவில்லை.
இறந்துபோன மான்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுக்கு பின், இறப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.