தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் அந்தமானில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
![அந்தமானில் அசானி புயல்.. 1 images 94](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/images-94.jpeg)
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே புயலாக வலுவடையும் என்று தெரிவித்தது.
இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அசானி புயல் காரணமாக அந்தமானில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதற்கிடையே, சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல்எதிரொலியால், சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.