கோவில்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்திய ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மத நம்பிக்கை உள்ளவர்களே கோவிலுக்கு வருகின்றனர். கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. கோவில்களில் விஐபி தரிசன முறையால் சாதாரண பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவது வேதனை அளிக்கிறது.கோவில்களில் விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஐபிக்களுக்கு வழங்கப்படும் சலுகை, பொறுப்புக்கானதே தவிர, தனி நபருக்கானது அல்ல.பொறுப்புக்கான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பக்தர்களை தகாத வார்த்தைகளால் பேசும் கோவில் ஊழியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.காவல்துறை, வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்கக் கூடாது.கோவிலின் பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை 3 வாரங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.திருச்செந்தூர் கோவிலில் 40 ஆயுதப்படை காவலர்களை தூத்துக்குடி எஸ்.பி.நியமிக்க வேண்டும்,என்று தெரிவித்தார்.
![திருச்செந்தூர்கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 1 images 2022 03 24T123739.739](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/images-2022-03-24T123739.739.jpeg)