சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பஞ்சாப்பிற்கு ரூ. 1 லட்சம்கோடி நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இந்நிலையில் நேற்று முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பகவந்த் மான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பஞ்சாப் பிரச்சனைகள் குறித்துப் பேசினேன். பஞ்சாபில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான ஆதரவு கிடைக்கும் என உண்மையாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
பின்னர் பகவந்த் மான் கூறியது, பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். பஞ்சாப்பில் முந்தைய காங்., அரசு ரூ. 3 லட்சம் கோடி கடன் சுமையை வைத்து விட்டது. தற்போது நிதி நிலையை வலுப்படுத்த சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி என இரு ஆண்டுகளுக்கு ரூ. 1லட்சம் கோடி தொகுப்பு நிதியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.