தெலங்கானா மாநிலத்தில்,ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
தெலங்கானா மாநிலம் யாததிரி புவனகிரி மாவட்டதில் யாதகிரிகுட்டா எனும் குன்றின் மீது நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. யாதகிரி குட்டா ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இக்கோயில் புராண காலச் சிறப்பை கொண்டதாகும். இக்கோயிலை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புதுப்பிக்க முடிவு செய்தார். ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆந்திராவுக்கு சென்றதால் தெலங்கானா மாநிலத்தில் லஷ்மி நரசிம்மர் கோயிலை, ஏழுமலையான் கோயில் போன்று அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்காக 2016ம் ஆண்டு முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். நாட்டின் மிகப்பெரிய ஆலயத் திட்டமாகக் கருதப்பட்ட அயோத்தியா ராம் மந்திரைவிட அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. பிரமாண்டமாக 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் ஆகம விதிப்படியும், காக்கத்தியர் கட்டிடக்கலையினைப் பின்பற்றியும் 2,50,000 டன் கருப்பு கிரானைட் கற்களைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இந்த ஆலய வளாகத்தில் ஏழு கோபுரங்கள், விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும் 12 ஆழ்வார்களைக் குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களில் மொத்தம் 52 தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கலசம் அமைக்கும் பணியைச் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக ரூ1,280 கோடிசெலவில், கோயிலின் புனரமைப்பு பணிகள் நடத்தப்பட்டன. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கோயில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முதல்வர் சந்திரசேகரராவ், அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்
கும்பாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.