மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,வரும் ஏப் 14ல் நடைபெற உள்ளது. இதை காண, பக்தர்கள் ‘ஆன்லைனில் கோவில் இணைய தளத்தில் www.maduraimeenakshi.org ஏப் 4 முதல் ஏப்7 வரை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். இலவச அனுமதியும் உண்டு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப் 5ல் துவங்கி, 16 வரை நடக்கிறது. விழா வின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெற உள்ளது.
திருக்கல்யாண உற்சவத்தை காண பக்தர்களுக்கு 200, 500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 200 ரூபாய் கட்டணத்தில், அதிகபட்சம் 3 பேருக்கும், 500 கட்டணத்தில் அதிகபட்சம் 2 பேரும் அனுமதிக்கப்படுவர்.
மேலும், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டண சீட்டு பெற வேண்டும். குறிப்பாக, 500 ரூபாய் கட்டண சீட்டு 2,500 பேருக்கும், 200 ரூபாய் கட்டண சீட்டு 3,200 பேருக்கும் மட்டுமே வழங்கப்பட உள்ளன. ஒரே நபர் இரண்டு கட்டண சீட்டிற்கு விண் ணப்பிக்க முடியாது. கோவில் இணைய தளத்தில் www.maduraimeenakshi.org ஏப்4 முதல் ஏப்.7 வரை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை பதிவேற்றப்பட வேண்டும். மொபைல் போன் எண், இ – மெயில் முகவரி கட்டாயம் தேவை. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தில், மார்பளவு போட்டோ இணைக்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு மொபைல் போன் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதிக விண்ணப்பங்கள் வந்தால், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, சம்பந்தப்பட்டோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மொபைல் போன் எண் தெரிவிக்காதவர்கள் அறியும் வண்ணம், கோவில் அலுவலக அறிவிப்பு பலகையில், ஏப்., 8 காலை 11:00 மணிக்கு அறிவிப்பு ஒட்டப்படும் .கட்டண சீட்டு ஒதுக்கீடு பெற்ற விபரம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள், ஆன்லைனில் பதிவு செய்து, கட்டண சீட்டு தொகையை செலுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
திருக்கல்யாணம் ஏப் 14ல் காலை 10.35 மணிமுதல் 10.59 மணிக்குள் நடக்கிறது. கட்டண சீட்டு பெற்றவர்கள், காலை 9.00 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.இதில், 500 ரூபாய் கட்டண சீட்டு பெற்றவர்கள், வடக்கு கோபுரம் முனீஸ்வர சன்னிதி ஒட்டிய வழியிலும், 200 ரூபாய் கட்டண சீட்டு பெற்றவர்கள் ராஜகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர்.
திருக்கல்யாணத்தை இலவசமாக காண விரும்பும் பக்தர்கள், தெற்கு கோபுரம் வழியாக முன்னுரிமை அடிப்படையில் இடத்திற்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.விழாவிற்கு வரும் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க, கோவிலின் பிர்லா மந்திர் விடுதியில் நேரடி முன்பதிவு வசதியும் உண்டு என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.