கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு காதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 20 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதிய தொற்று கண்டறியப்படுகிறது. அதே போன்று சேலம், திருப்பூர் மற்றும் ஒரு சில மாவட்டங்களிலும் ஓரிரு புதிய தொற்று கண்டறியப்படுகிறது.
பொது இடங்களில் வருவதற்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று தான் பொது சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். முக கவசம் அணிவது, விலகி இருப்பது, உள்ளிட்டவைக்கான அறிவிப்புகள் திரும்ப பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே கை கழுவுதல், முக கவசம் அணிதல், விலகி இருத்தல் ஆகிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்த்தல், காற்று இல்லாத இடங்களை தவிர்த்தல் வேண்டும்.
உலகில், இப்போதும் 7 முதல் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஒரு நாளில் உறுதி செய்யப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான போர் வென்றுவிட்டோம் என நினைத்து கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டால் அது முட்டாள்தனமாகும்.
பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்வது தொடர வேண்டும். அதே நேரம் மரபணு பரிசோதனைக்கு மாதிரிகள் தொடர்ந்து அனுப்பப்பட வேண்டும்.
நாம் இதுவரை எடுத்த முயற்சிகளின் பலனை இனிமேல் அனுபவிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வரும் நாட்களில் மிக அவசியம் என்றும் காதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
![கொரோனா குறைந்தாலும் பாதுகாப்பு முறைகளை கைவிடக்கூடாது: 1 gallerye 142231633 2982982](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/gallerye_142231633_2982982.jpg)