― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மிஸ் கூவாகம்2022 அழகிபோட்டி ஏப் 18ல் நடக்கிறது.

மிஸ் கூவாகம்2022 அழகிபோட்டி ஏப் 18ல் நடக்கிறது.

பிரபலமான கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கிய நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மிஸ் கூவாகம் அழகிபோட்டி ஏப் 18ல் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள திருநங்கைகள் திரண்டுவந்து வழிபாடு நடத்தி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்த திருவிழா நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 5-ந்தேதி கூத்தாண்டவர் கோவில் 18 நாள் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கூவாகம் நத்தம், வேலூர் தொட்டி சிவலிங்குளம் நத்தம், வேலூர் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விரதமிருந்து பக்தர்கள் வாணவேடிக்கையுடன் கொண்டு வந்து கூழ், கஞ்சி தானியப் பொருட்கள் கூத்தாண்டவருக்கு படையலிடப்பட்டது.  2-ம் நாள் விழாவான நேற்று பந்தலடியில் முக்கிய பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று சாந்தனுசரிதம் மற்றும் சாமி புறப்பாடு நடக்கிறது. நாளை வெள்ளி க்கிழமை பீஷ்மர் பிறப்பு நிகழ்ச்சியும், இரவு சாமி புறப்பாடும் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி மற்றும் திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சி வருகிற 19-ந் தேதி மாலை நடைபெறுகிறது.

அன்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளிலிருந்தும், கொல்கத்தா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தாலி கட்டியவுடன் அன்று இரவு முழுவதும் திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். 20-ந் தேதி காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

கூத்தாண்டவர்கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் விழுப்புரத்தில் மிஸ்கூவாகம் அழகிபோட்டி நடந்து வருகிறது. இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

இதுகுறித்து தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருணா விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,

மிஸ்கூவாகம் நிகழ்ச்சி கடந்த 20 வருடங்களாக சிறப்பாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18-ந் தேதி மிஸ் கூவாகம் அழகிபோட்டி நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு 2 சுற்றுகளாகவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கூவாகம் 2022 அழகியை தேர்வு செய்யும் போட்டியும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மூத்த திருநங்கையர் 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கும் 5 இளம் திருநங்கைகளுக்கு விருதுவழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கிய திருநங்கைகள் நலவாரியத்தை தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை அடுத்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
என அவர் கூறியுள்ளார்.

images 2022 04 07T105955.300

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version