தனது மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவர் ஆத்திரம் தீராமல் தன் மனைவியையும் வெட்டிக் கொன்று, போலீஸில் சரண் அடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (54). சலவைத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும் இவருக்கு ஒரு மனைவி ஜெயலட்சுமி(42). இவர்களின் மகன் முத்துக்குமார்(18) பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியில் குடியானவத் தெருவைச் சேர்ந்த விவசாயி வீரமணி(42)-க்கும் ஜெயலட்சுமிக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த கருணாநிதி ஜெயலட்சுமியை கண்டித்துளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஜெயலட்சுமி வீரமணியுடனான தொடர்பைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வீரமணி வந்துள்ளார். வீட்டின் பின்புறம் உள்ள குளியலறை அருகே ஜெயலட்சுமியுடன் வீரமணி பேசிக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த கருணாநிதி இதைக் கண்டு கோபத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து வீரமணியைத் தாக்கியுள்ளார். கல் தாக்குதலில் வலி தாங்க முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்த வீரமணியை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டியுள்ளார் கருணாநிதி. இதனால் வீரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு பயந்துபோன ஜெயலட்சுமியையும் ஆத்திரம் குறையாத கருணாநிதி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அவரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் கருணாநிதி அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.