இந்தியா–இலங்கை இடையே ஒப்பந்தங்கள்: மோடி–சிறீசேனா முன்னிலையில் கையெழுத்து

Published:

narendra-modi_sreesena பிரதமர் மோடி–சிறீசேனா பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. நேற்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறீசேனாவுக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறீசேனாவை பிரதமர் பிரணாப் முகர்ஜி கைகுலுக்கி வரவேற்றார். தனக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு சிறீசேனா தனது மனைவியுடன் தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதியம் 12.15 மணிக்கு ஐதராபாத் இல்லத்தில் சிறீசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மதிய விருந்து அளித்தார். அப்போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து செயல்படுவது, வர்த்தகம், இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள், போருக்கு பின் தமிழர்கள் பகுதியில் இந்தியாவின் உதவியுடன் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள், தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குதல், மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில், அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது குறித்த ஒப்பந்தம் முக்கியமானது ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் அணுசக்தி துறை செயலாளர் ரத்தன்குமார் சின்கா, இலங்கை அரசின் சார்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை மந்திரி சம்பிகா ரனவாகா ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்து கொள்வதோடு அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சியும் அளிக்கும். மேலும் கலாசாரம், கல்வி, வேளாண்மை ஆகிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. கலாசார ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நூலகங்கள், அருங்காட்சியகங்கள், கலாசார ஆவணங்கள், தொல்லியல், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும். கல்வி துறையிலான ஒப்பந்தம், நாளந்தா பல்கலைக்கழகத்தின் திட்ட பணிகளில் இலங்கை இணைந்து செயல்பட வழிவகை செய்கிறது. வேளாண்மை பொருட்களை பதப்படுத்துதல், தோட்டக்கலை, வேளாண்மை உபகரணங்கள் தொடர்பாக பயிற்சி அளித்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை போக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வேளாண்மை துறையில் கையெழுத்தான ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இலங்கை அதிபர் சிறீசேனா தனது மனைவி ஜெயந்தியுடன் 4 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் மாலை இந்தியா வந்தார். அதிபராக பதவி ஏற்றபின் இது அவரது முதல் வெளிநாட்டு பயணம் ஆகும். விமானம் மூலம் தில்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இரவில் சிறீசேனா தில்லியில் உள்ள மவுரியா ஓட்டலில் தங்கினார். அவருடன் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் வந்து உள்ளது. சிறீசேனா வருகை குறித்தும், அவருடனான பேச்சு குறித்தும், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அவை….  

Related articles

Recent articles

spot_img