![]()
சென்னை: இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை தி.மு.க.வினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடுகின்றனர். இதையொட்டி, நேற்று தி.மு.க. தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 63 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கனிமொழி எம்.பி. பேசியது:- இந்த விழாவை மகளிர் அணி நடத்துவதால் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இது மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், எனது பிறந்த நாள் விழாவுக்கு விளம்பர பதாகைகள் வைப்பதை விட, பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி உள்ளதால் தான் பெண் குழந்தைகளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெண் கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு ஆணை படிக்க வைப்பது என்பது தனி நபரை படிக்க வைப்பதாகும். இதுவே ஒரு பெண்ணை படிக்க வைப்பது என்பது ஒரு தலைமுறையை படிக்க வைப்பது என்பதாகும். எனவே பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர் உணராத காலத்தில், அதனை உணர்த்தும் வகையில் கலைஞர் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். அந்த வகையில், அண்ணன் ஸ்டாலினும், தனது அறிக்கையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தார். 1996-ல் ஸ்டாலின் சென்னை நகர மேயர் பதவியில் இருக்கும்போது, எத்தனையோ பாலங்களை கட்டியதோடு அல்லாமல், கல்வி துறையிலும் புரட்சியை கொண்டு வந்தார். மாநகராட்சி பள்ளி மாணவர்களும் மற்ற பள்ளி மாணவர்களுக்கு இணையாக படிக்கும் வகையில் ‘மல்டி மீடியா’ படிப்பை முதல் முறையாக அரசு பள்ளிகளில் கொண்டு வந்தார். அதுவரை 55 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதத்தை 78 சதவீதமாக மாற்றினார். மாநகராட்சி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் உயர்த்தியதோடு, 2 ஆயிரத்து 20 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பினார். இதன் மூலம் கல்விக்கு ஸ்டாலின் எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.