![]()
சென்னை: சென்னையில் தங்களது குடும்ப விழாவில் திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதியை நேரில் சந்தித்தார் அழகிரி. ஆனால், பேசாமல் நகர்ந்து விட்டார். கருணாநிதியின் மகன் தமிழரசு இல்ல விழா சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திங்கள்கிழமை நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், கனிமொழி, மு.க.அழகிரி, காந்தி அழகிரி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், முரசொலி செல்வம், செல்வி என கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு கருணாநிதி வந்தபோது, அழகிரி 4-ஆம் வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுச் சென்றார் கருணாநிதி. ஆனால், கடைசி வரை அழகிரி கருணாநிதியைச் சந்தித்துப் பேசவில்லை. மேலும், அழகிரி வந்திருப்பதாக கருணாநிதியிடமும் சொல்லப்பட்டது. ஆனாலும் அவரும் அழகிரியை அழைத்துப் பேசவில்லை. திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு, கருணாநிதியுடன் சந்திப்பதை அழகிரி தவிர்த்து வருகிறார். கோபாலபுரம் இல்லத்துக்கு அழகிரி சென்றாலும், இருவருமே சந்திப்பைத் தவிர்த்து வருகின்றனர். இந்த விழாவிலும் நேரில் சந்தித்தும்கூட கருணாநிதியுடன் அழகிரி பேசவில்லை. வழக்கம்போல், ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் அழகிரியிடம் பேசிவிட்டுச் சென்றனர்.