புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நமக்கு நாமே விடியல் மீட்பு நடைபயணம் தொடங்கிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மறமடக்கி அருகே ஆலமரத்தடியில் அமர்ந்து அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். சென்னையை சேர்ந்த மறமடக்கி பகுதியில் விவசாய தொழில் செய்து வரும் வெங்கட் கூறியதாவது:–
இந்த பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் அதனை ஊக்குவிக்கவோ, காப்பாற்றவோ அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது என்றார்.
இதையடுத்து காமராஜ் என்ற விவசாயி பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கி விவசாயிகளின் குறைகளை போக்கியது தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசுதான். இங்கிருந்து வடகாடு பக்கம் சென்றால் ஏராளமான மிளகாய் மண்டியும், 250 கடலை மில்லும் உள்ளன. அவை அனைத்துமே இன்று செயல்படமுடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இன்றி ஆயிரம் ஆண்டு மரம் கூட பெயர்ந்துவிட்டது. விவசாயிகளுக்கு எந்தவித சலுகையும் தராத அரசாக இந்த அ.தி.மு.க. அரசு உள்ளது என்றார்.
இந்த சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன்பு தி.மு.க. தலைவர் கலைஞரிடம் கருத்து கேட்க சென்றேன். அப்போது நாளை கூறுகிறேன் என்று என்னை அனுப்பிவிட்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு மறுநாள் என்னை அழைத்து இந்த சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததோடு, பயணத்திற்கு நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் என்ற பெயரும் வைத்தார்.
தற்போது தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. வெறும் காட்சி தான், அதுவும் காணொலி காட்சி தான். இங்கு ஆட்சி நடக்கவில்லை, படுத்த நிலையில் உள்ளது. அதையும் தாண்டி கோமா நிலையில் உள்ளது. எனவே தான் தமிழக மக்களை காப்பாற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். 3 கட்ட பயணத்தில் முதல் கட்டத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வந்துள்ளேன்.
பயணம் தொடங்கிய நாள் முதல் காலை 8 மணி முதல் இரவு வரை மக்களை சந்தித்து வருகிறேன். அறந்தாங்கியில் இன்று காலை சுற்றுப்பயணத்தை தொடங்கியது முதல் அனைத்து தரப்பினரும் பல்வேறு குறைகளை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் குறைகள் போக்கப்படும் இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.