மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரிக்கிறது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான முதலீடு மற்றும் வங்கி இருப்பை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு தற்காலிகமாக முடக்கியது.
இதுகுறித்து பிஎம்எல்ஏ தீர்ப்பாயம் ஆய்வு நடத்தியது. ஏர்செல்-மேக்சிஸ் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சட்ட விரோத பணப் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இயங்கும் தீர்ப்பாய அதிகாரி துஷார் விஷா உத்தரவில் கூறிஉள்ளார். இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சிபிஐ கூறி உள்ளது
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அதன் படி 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கார்த்திசிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை ஏப்ரல் 16 ந்தேதி வரை கைது செய்ய சிபிஐக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அழைத்த போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.