ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்ன சமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் உள்ள இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இன்று முதல் நவம்பர் 28ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீரை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலம், பாசன வசதி பெறும்.
கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை மற்றும் முல்லை பெரியாறு அணை ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன. மொத்தம் 554 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையில் நீர்மட்டம் 491 அடியாக உள்ளது. நீர்மட்டம் 510 அடியை எட்டும் போது, அணையில் ஷட்டர் கதவுகள் இல்லாத காரணத்தால், தண்ணீர் தானாக வெளியேறும். அது, அணையை ஒட்டியுள்ள செருதோணி அணைக்கு வந்து சேரும். இதனால், அங்கிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.