தமிழ் அண்ணலாகத் தன்னிகர் அற்ற பணிகள் செய்த மூத்த தமிழ் அறிஞர், தமிழண்ணல் தனது 88ஆம அகவையில் நேறறிரவு (29-12-2015) மதுரையில் காலமானார். தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
சங்கம் வளர்த்த மதுரையில் தியாகராசர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, ஒப்பற்ற பணிகளை ஆற்றியவர்.
சங்க இலக்கியம் உட்பட 80-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
திரு வி.க. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது,செம்மொழி விருது போன்ற தகுதியான விருதுகளை மிகுதியாகப் பெற்றவர்.
வாழையடி வாழையென வளரும் தமிழ் அறிஞர் பெருமக்களைத் தம் வழிமரபில் உருவாக்கிய பெருமகனார். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மீது எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு நூல்களையும் எழுதியவர்.
கட்டுரை இலக்கியம், கவிதை, சிறுகதை என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். ‘மெல்லத் தமிழ் இனி வெல்லும்’ என்று சொல்லும் வகையில், மரபுத் தமிழ் சார்ந்த ஆய்வுகளையும், புதுப்புதுக் கோணங்களில் கருத்து அரங்குகளையும் வழிநடத்தியவர்.
தமிழ்ச் சான்றோர் பேரவை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, தமிழைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் பேணிட வேண்டும் எனக் காலமெல்லாம் போராடியவர்.
தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்