சென்னை:
திமுக.,வுடனான கூட்டணி தொடரும் என்று முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்தியன் யூனியன் முஸ்லிம் ‘லீக்’ மாநில தலைவர் காதர் மொய்தீன் இன்று சந்தித்துப் பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
விழுப்புரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் ‘லீக்’ மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கருணாநிதியை சந்தித்தார். அதற்கு, மு.க.ஸ்டாலினை மாநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கருணாநிதி உறுதி அளித்தார்.
இதன் பின்னர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம். அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். தி.மு.க. கூட்டணியை தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறினார்.