தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் டி. ராஜுவின் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அலுவலகத்தில்
நேற்று நள்ளிரவில் குண்டுவீச்சு நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டடதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளளார்
நடைபெற்ற குண்டுவீச்சு குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான , செல்லூர் டி. ராஜுவின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மதுரை காலவாசல் சந்திப்பு அருகில் சம்மட்டிபுரத்தில் உள்ளது.
நேற்று நள்ளிரவில் இந்த அலுவலகத்திற்கு இரு சக்கர ஊர்தியில் வந்த இருவர், பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இக்குண்டுகள் வெடித்ததில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்ற போதிலும், அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகளும், நாட்டு வெடிகுண்டும் வீசப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெட்ரோல் குண்டுகள் வெடிக்காத நிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்து லேசான சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த இரு அலுவலகங்களும் அமைச்சர் செல்லூர் ராஜு கட்டுப்பாட்டில் இருப்பவை. அவரை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டிருக்கிறது என்றும், இதற்கு காரணம் யார் என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது.
மதுரையில் அமைச்சரின் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது.
மூத்த அமைச்சரின் அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், அப்பாவி மக்களை காவல் துறை எவ்வாறு பாதுகாக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது அச்சமும், கலக்கமும் தான் ஏற்படுகிறது என்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.