மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீது காங்கிரஸ் கொடுத்துள்ள உரிமை பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பட்ஜெட் தாக்கல் 5 நிமிடம் தாமதம் ஆனது.
பாராளுமன்ற கூட்டத்தில் நேற்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா மரணம் குறித்து தவறான கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீது உரிமை பிரச்சினை கொண்டுவந்தனர். நேற்று பட்ஜெட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த பிரச்சினை குறித்து கோஷம் போட்டனர்.
அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி அழைத்தார். அப்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் எழுந்து நின்று இந்த பிரச்சினையை எழுப்பினார். அதற்கு சபாநாயகர், இதுபற்றி எனக்கு அறிக்கை வந்துள்ளது. அது எனது பரிசீலனையில் உள்ளது என்றார்.
காலை 11.02 மணிக்கு அருண் ஜெட்லி பட்ஜெட் உரையை வாசிக்க எழுந்தார். அப்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் கொடுத்த உரிமை பிரச்சினை குறித்து சபாநாயகர் பதில் அளிக்கவில்லை எனக்கூறி கோஷம் போட்டனர். இதனால் அருண் ஜெட்லி உட்கார்ந்துவிட்டார்.
காங்கிரஸ் அவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தீர்மானம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். அதற்கு சபாநாயகர், ‘மனிதவளத்துறை அமைச்சர் 26–ந்தேதி இந்த அவையில் பேசியது குறித்து அவர் மீது உரிமை பிரச்சினை தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. அந்த விவகாரம் எனது பரிசீலனையில் உள்ளது’ என்றார்.
இந்த அமளி காரணமாக பட்ஜெட் தாக்கல் 5 நிமிடங்கள் தாமதமாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.