காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கல்பட்டு கிராமத்த்தில் பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கிய போது மாயமான 6 வயது சிறுமி, கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டாள். சிறுமி நரபலி கொடுக்கப்பட்டாளா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மகள் திவ்யா (வயது 6). இவள், அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு சிறுமி திவ்யா, தனது பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கினாள்.
நள்ளிரவில் சதீஷ்குமார் எழுந்து பார்த்த போது திவ்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல்வேறு இடங்களில் தேடினார். எங்கேயும் சிறுமியை காணவில்லை. இதுபற்றி சூனாம்பேடு காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் செய்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் சதீஷ்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மாயமான திவ்யா பிணமாக கிடந்தாள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு காவல் நிலையத்தினர், கிணற்றில் மிதந்த சிறுமி திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமி திவ்யாவை யாராவது கடத்திச்சென்று கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசினார்களா? அல்லது சிறுமி திவ்யா, நரபலி கொடுக்கப்பட்டாளா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.