சோமாலியா தலைநகர் மொகாதீஷூவில் இருந்து வடமேற்கே சுமார் 245 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சந்தைப்பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பைடோவா நகரில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே நடைபெற்ற இரு வேறு தற்கொலைப்படை தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதே போல், கடந்த வாரம் மொகாதீஷூ அருகே உள்ள உணவகம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.