வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறியதால், தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்துவருகிறது. தொலைதுார புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரைகளில் நிறுத்தியுள்ள படகுகளை பாதுகாக்குமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.