சென்னை:
சென்னையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினர் சென்னைக்கு வந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27661200, 27667272, 27662222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்.
சென்னையில் பல பகுதிகளிலுள் தொடர் மழை பெய்து வருகிறது. அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். அரக்கோணம், நெல்லுாரிலிருந்து மீட்புக் குழுவினர் 270 பேர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் குழுவுக்கு 46 பேர் என மொத்தம் 6 குழுக்கள் பிரிக்கப்பட்டு, மணப்பாக்கம், நந்தனம், மணலி, வேளச்சேரி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர் புரம் ஆகிய இடங்களில் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் 7 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்