விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் மத்திய அரசால் திருத்தப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரலாம்.
அந்த சட்டதிருத்தம் விரைவில் அமலுக்கு வரும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் துறையின் அமைச்சர் ராமவிலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .
சட்டம் திருத்தம் குறித்து மேலும் ராமவிலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளதாவது :-
தற்போது அமலில் இருக்கும் 1986 ஆண்டைய நுகர்வோர் சட்டத்துக்குப் பதில் இப்புதிய சட்டம் கொண்டுவர நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2016-க்கு நாடாளுமன்றம் நிலைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
விளம்பரப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பொருள்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். தரமற்ற பொருள்களை ஏமாற்றி விளம்பரம் செய்தால், விளம்பரத்தில் நடிப்பவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் வரை நஷ்டஈடு கோரலாம். மேலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
புதிய சட்டத்தின்படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மையங்கள் இனி ரூ. 1 கோடி வரையிலான புகார்களையும், மாநில நுகர்வோர் குறைதீர் மையங்கள் ரூ.14 கோடி வரையிலான புகார்களையும் விசாரிக்கலாம் என்று ராமவிலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்