- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: முருகனின் வாகனங்கள்!

திருப்புகழ் கதைகள்: முருகனின் வாகனங்கள்!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 204
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


குன்றும் குன்றும் – பழநி
முருகனின் வாகனங்கள்

இத்திருப்புகழில் நாரத முனிவர் செய்த யாகத்தின் மூலம் கிடைத்த ஆட்டினை முருகன் வாகனமாக ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி வருகிறது.

முருகனின் வாகனம் எது என்றால் மயில் என்று ஒரு சிறு குழந்தை கூட சொல்லிவிடும். முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், இந்திரன் கொடுத்த யானை மற்றும் அன்னம், ஆடு, குதிரை ஆகியவையும் வாகனங்களாக இருந்து வருகின்றது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார். அங்கு அமர்ந்த கோலத்தில் உள்ள முருகனின் கிழே யானையும் ஆடும் வாகனமாக உள்ளது. சில கோயில்களில் கோழி வாகனமும் உண்டு.

சங்க இலக்கியமான பரிபாடலில் முருகனின் வாகனமாக ‘மேடம்’ எனும் ஆடு குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தக்கலை அருகிலுள்ள குமாரகோயிலில் உற்சவ காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில் பவனி வருவார்.

முருகனுக்கு மயில், யானை, ஆடு என்று மூன்று வாகனங்கள் இருப்பதற்கு உட்பொருள்கள் உண்டு. மனம், புத்தி, சித்தம் என்று உருவகப் படுத்தியதாக வைத்துக் கொள்ளலாம். மனம் தூண்ட, புத்தி அதனை ஏற்க, சித்தம் செயல்படுகிறது என்பர் அறிஞர்.. ‘பிணிமுகம்’ என்ற யானை மேலுள்ள முருகனின் கோலத்தைக் குமார தந்திரம் போன்ற பல நூல்கள் சொல்கின்றன. வேழம் மேல்கொண்டு, அங்குசம் கடாவ ஒரு கை, ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி என்றெல்லாம் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.

arunagiri muruga peruman

இரத்தன கிரியில் முருகனின் வாகனமாக இருக்கும் மயில் அசுரர்களுக்கு பயந்த ஒடின இந்திரனே என்கிறது இரத்தனகிரி தல வரலாறு. திருத்தணியில் உள்ள யானை வாகனம் ஸ்வாமியை பார்க்காமல் கிழக்கு நோக்கி இருக்கிறது.

ஆடு வாகனமானதற்கு ஒரு கதை உள்ளது. முருகனின் அவதார இரகசியம் அறியாத தேவர்கள் அவரிடம் சண்டையிட்டனர். முருகன் அவர்களை தோற்கடித்தார். பின்னர் தனது விஸ்வரூபத்தைக் காட்டியருளினார். விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவர் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம், எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றார்.

இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான். தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா, நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒன்று செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார்.

யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர்.

பார்த்தாயா? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் தொடங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் என்னவானது? நாளை காணலாம்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version