- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ்க் கதைகள் : மராமரம் துளைத்தல்!

திருப்புகழ்க் கதைகள் : மராமரம் துளைத்தல்!

கீழுலகங்கள் ஏழாவன; அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன.  ஏழ் இலாமையால், ஏழு கண்டபின் என்பதில் வரும் ஏழு - ஆகு

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 324
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

விடமும் வடிவேலும் – சுவாமி மலை
மராமரம் துளைத்தல்

     இத்திருப்புகழில் அருணகிரியார் இராமன் தனது அம்பால் ஏழு மராமரங்களைத் துளைத்த கதையைக் குறிப்பிடுகிறார். மாய மானைத் துரத்திச் சென்ற இராமன் அதன் மீது அம்பு விட்டு, அதனை வதம் செய்கிறான்.

அப்போது மாயமானாக வந்த மாரீசன், “இலட்சுமணா, சீதே” எனப் பெருங்குரல் எடுத்துக் கூவிவிட்டு மடிகிறான். அதனைக் கேட்ட சீதை இலக்குவனை என்னவென்று பார்த்து வர அனுப்புகிறாள். அந்த சமயத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்கிறான்.

     சீதையைத் தேடி வருகையில் இரமலட்சுமணர்கள் அனுமனைச் சந்திக்கிறார்கள். சுக்ரீவனோடு நட்புகொள்கிறார்கள். சுக்ரீவனுக்கு வாலியால் ஏற்பட்ட கொடுமையை இராமன் கேட்கிறார். வாலி மிகுந்த வலிமை உடையவன். தன்னை எதிர்த்து யார் போர் செய்தாலும் அவர்களிடம் உள்ள வலிமை வாலியிடம் வந்து சேரும். இது சிவபெருமான் வாலிக்கு கொடுத்த வரம் ஆகும். ஒரு சமயம் மாயாவி என்னும் அரக்கனை அழிக்க வாலியும், சுக்ரீவனும் சென்றனர்.

அவ்வரக்கன் மலைக்குகையில் உள்ள ஒரு பொந்தில் ஒளிந்துக் கொண்டான். வாலி, தான் உள்ளே சென்று போரிட்டு அரக்கனை அழித்துவிட்டு வருவதாக சொல்லி சுக்ரீவனை வெளியே இருந்து காவல் புரியும்படி கூறிவிட்டு சென்றான். அக்குகையில் இருந்து வந்த இரத்ததால் அண்ணன் வாலி இறந்து விட்டதாக எண்ணிய சுக்ரீவன், அரக்கன் வெளிவந்தால் அனைவரையும் அழித்து விடுவான் என குகையை ஒரு கல்லை கொண்டு மூடிவிட்டு சென்றான்.

     பிறகு வாலி அரக்கனை வதம் செய்துவிட்டு வந்தபோது, குகை மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். வாலி கல்லை நகர்த்திவிட்டு குகைக்குள் இருந்து வெளிவந்து கிஷ்கிந்தை அடைந்தான். அங்கு சுக்ரீவன் அரசாள்வதை கண்டு, தன்னை கொன்று அரச பதவியை பறிக்க தான் சுக்ரீவன் இவ்வாறு செய்துள்ளான் என சுக்ரீவன் மீது கோபம் கொண்டான்.

சுக்ரீவனை கொல்ல வேண்டும் என நினைத்து அவன் போகும் இடமெல்லாம் சென்று அவனை துன்புறுத்தி வந்தான். அரக்கன் வெளிவந்தால் அனைவரையும் அழித்து விடுவான் என்பதால் தான் குகையை மூடிவிட்டு வந்தேன் என சொல்லியும் வாலி கேட்கவில்லை. இதனால் சுக்ரீவன் இம்மலையில் வந்து ஒளிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட சுக்ரீவனின் மனைவி ருமாதேவியை அவன் சிறை பிடித்து வைத்துள்ளான் எனக் கூறினான்.

     இதைக் கேட்டு இராமர் கோபம் கொண்டு எழுந்தார். சுக்ரீவா, உடனே எனக்கு வாலியைக் காட்டு. அவனை வதம் செய்துவிட்டு உனக்கு முடிசூட்டுகிறேன் என்றார். ஆனால் சுக்ரீவனுக்கு வாலியை எதிர்க்கும் அளவிற்கு இராமனுக்கு வலிமை உள்ளதா? என சந்தேகம் எழுந்தது. இதைப் பார்த்த அனுமன் சுக்ரீவனை தனியே அழைத்துப் சென்று, வாலியை கொல்லும் அளவிற்கு இராமனரிடம் வலிமை உள்ளதா என நீ சந்தேகப்படுகிறாய். வானளவில் படர்ந்து வளர்ந்து நிற்கும் மராமரங்களை இராமரின் அம்பு துளைத்தால், அது நிச்சயம் வாலியின் உயிரையும் துளைக்கும். ஆதலால் நாம் இதனை சோதித்துப் பார்ப்போம் என்றான். இதனை கம்பர்

மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள்

எண்ணில் ஏழ் உள; அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன்,

விண்ணுள் வாலிதன் ஆர் உயிர் விடுக்கும்’ என்று உலகின்

கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால்.

(கம்பராமாயாணம், கிட்கிந்தா காண்டம், நட்புக் கோட் படலம்)

என்று பாடுகிறார்.

     எனவே அனுமனும் சுக்ரீவனும் இராமனிடம் சென்று தங்களால் இந்த மராமரங்களை துளைக்க முடியுமா? எனக் கேட்டனர். இராமர் தன்னுடைய வலிமையை இவர்கள் அறிய எண்ணுகிறார்கள் என எண்ணினார். உடனே தன் கோதண்டத்தை எடுத்து நாணை பூட்டி அம்பை மரங்களை நோக்கி எய்தினார். நாணின் ஒலியைக் கேட்டு வானரங்கள் எல்லாம் பயந்து ஓடி ஒளிந்தன.

இராமரின் பாணம் ஏழு மராமரங்களையும் துளைத்தது. அந்த மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்த சுக்ரீவன் ஆச்சர்யமடைந்து நின்றான். ஒரு மரத்தை துளைப்பதே மிகவும் அரிது. அதுவும் ஏழு மரங்களை துளைப்பது மிகவும் பாராட்டக்குரியது என இராமரை வணங்கித் தொழுதான்.

ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்

ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற

ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;

ஏழு கண்டபின், உருவுமால்; ஒழிவது அன்று, இன்னும்.

(கம்பராமாயாணம், கிட்கிந்தா காண்டம், மராமரப் படலம்)

     இராமன் தொடுத்த அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து, கீழ் உலகங்கள் ஏழையும் துளைத்துச் சென்றமையால் ஏழென்னும் எண்ணிக்கை கொண்ட பொருள்களையெல்லாம் அவன் அம்பு துளைக்கும் என்பது தெளிவாகிறது.  கீழ் உலகங்கட்கு அப்பால் ஏழென்னும் எண்ணமைந்த பொருள்கள் இல்லாமையால் அம்பு திரும்பி வந்தது என்று காரணத்தைக் கற்பித்துக் கூறியதால் ‘ஏதுத்தற்குறிப்பேற்ற அணியாம்’.  மேலும் ஏழு என்னும் எண்ணிக்கைக்கு உரியது எதையேனும் கண்டால் இராமன் கணை ஊடுருவாது விடாது என்றது ஆன்மாக்களின் ஏழு பிறப்பைக் குறித்ததாகலாம்.

அவனைச் சரணடையும் பாகவதர்களின் ஏழு பிறப்பை நீக்கும் திறனுடையது பெருமான் கணை.  இராமபிரான் கணையால் தாக்குண்டவர்கள் வீடு பேறடைந்த குறிப்புடையது இராம காதை.  கீழுலகங்கள் ஏழாவன; அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன.  ஏழ் இலாமையால், ஏழு கண்டபின் என்பதில் வரும் ஏழு – ஆகுபெயர்.  கண்ட பின் – பின் ஈற்று எதிர்கால வினையெச்சம்; இராமன் அம்பு மராமரங்களைத் துளைத்த செய்தியைப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்,

‘மாதவரும்பர் பெருமாள் அரங்கர் வலியுணரா

தாதவன் மைந்தன் அயிர்த்த அந்நாளிலக் காயநெடும்

பாதவ மேழும் உடனே நெடுங்கணை பட்டுருவப்

பூதல மேழும் ஏழு பாதாலங்களும் புண்பட்டவே’

(திருவரங்கத்து மாலை – 41) என்று பாடியுள்ளார். 

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version