திருமண பந்தம் என்பது, நம் சமுதாயத்தில் சில பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலான மனநுட்ப உலகில் எத்தகையதாக இருந்தது! ; இன்றைய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது… வருத்தமாகத்தான் உள்ளது.
எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள்?
இவ்வாறு சில நாட்கள் / மாதங்கள்/ வருடங்களுக்குள் பிரிந்து போகவா?
முன்பெல்லாம் விவாக ரத்தாகும் அல்லது கணவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்களைக் கண்டால், கழிவிரக்கம் ஏற்படும்! தவறு பெண்ணிடமா அல்லது ஆணிடமா என்பதெல்லாம் உடனடியாக வெளித்தெரியாது; அது விவாதத்துக்குரியது! எதுவாக இருந்தாலும், பிரிந்து பட்டு தனியாக வாழ்வது எத்தகைய வலி என்பதை இருவருமே உணர வேண்டும்!
பொருளாதாரச் சார்பு என்ற பணியிட ஊக்கம், வேலை வாய்ப்பு வசதி, எவரையும் சார்ந்திராத தன்மை இவை மட்டுமே பெரும்பாலான பெண்களை விவாகரத்து என்ற மலை முகட்டுக்கு இழுத்துச் செல்வதாய்க் கருதுகிறேன்.
20 வயதில் ஈர்ப்பின் காரணத்தால் காதலிக்கிறார்கள், மணம் செய்கிறார்கள், அடுத்த ஐந்தாறு வருடங்களில் கசந்து பந்தத்தை அறுத்து வெளி வருகிறார்கள்! உடலில் சக்தியும் தெம்பும் இருக்கும் அடுத்த பத்து/ பதினைந்து ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு, வாழ வைக்கும்! 45 அல்லது 50 ஐக் கடந்துவிடும்போது, வழி தெரியாத வலி தெரியும்!
ஐ.டி., துறை பெண்களைப் பார்க்கும்போதும் இதுதான் தோன்றுகிறது. 35ல் இருந்து 40 வரை நல்ல பணிச்சூழல் இருக்கும்! அதன் பின்னர் புதியவர்கள் இந்தப் பணியிடத்தைப் பிடித்துவிடுவார்கள்! இன்றைய ’கைநிறைய சம்பளம்’ கணக்கு நிரந்தரமா என்பதை அவர்கள் யோசிப்பதே இல்லை!
***
டி.வி., சினிமா என ஊடக வெளிச்சத்துக்கு ஆசைப்பட்டு நடிக்கவோ அல்லது திரையில் தோன்றும் ஏதோ ஒன்றுக்காகவோ வந்துவிடும் பெண்களின் மண வாழ்க்கை சரியாக அமைந்து விடுவதில்லை என்பது பெருகிவரும் தற்போதைய விவாகரத்துகள் காட்டிக் கொடுக்கின்றன.
உண்மையில் எனக்கும் சினிமாத் துறைக்கும் வெகு தூரம். நான் சினிமாக்கள் பார்ப்பதில்லை; நடிகையர் விவரங்கள், பெயர்களைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில்லை!
நான் லிசா லட்சுமி என்ற இந்தப் பெண்ணை நடிகையாகப் பார்க்காமல், ஒரு சாதாரண பெண்ணாகவே பார்க்கிறேன். நடிகை என உடல் ரீதியாக ஏளனமாகப் பார்க்கும் சமூகம் இது. ஆனால், அவருக்குள்ளும் ஒரு மனசு இருக்கும்! என்பதை நான் உணர்கிறேன். திரைக்குப் பின் நடிப்பவர்கள், அதைத் தக்க வைக்க, திரைக்கு முன்னும் நடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இவர்கள்!
இந்தப் பெண்ணின் மன வலி… இந்த ஊடக அறிக்கையில் தெரிகிறது! தவறு யார் பக்கமாக வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனால் தவறைச் சரிசெய்யும் மன வலிமையை இருவருமே பெறாமல் போவது, வருந்தத் தக்கது!
இந்தப் படத்தில் இவர் புன்னகைத்துக் கொண்டிருந்தாலும், கண்களில் தெரியும் சோக நிழலை நான் கவனிக்கத்தான் செய்கிறேன்!
நடிகை லிஸ்ஸி லக்ஷ்மி பத்திரிகை செய்தி :