புது தில்லி:
‛தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது’ என மத்திய உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 3 பக்க அறிக்கையை அனுப்பி உள்ளார் ஆளுநர்.
அவரின் அறிக்கையில் கூறி உள்ளதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிமுக.,வில் நிலவும் பிரச்சனை உட்கட்சி பிரச்னைதான். சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்குள் தீர்ப்பு வழங்க உள்ள சூழலில், சசிகலாவை உடனே ஆட்சி அமைக்க அழைக்க இயலாது.
அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன என்பது குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன்.
– என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், இவ்வாறு ஆளுநர் அறிக்கை எதுவும் அனுப்பவில்லை என்று, ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை செய்திதொடர்பாளர் இது குறித்து ஏஎன்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டியில் தெரிவித்த போது, ஆளுநர் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் படவில்லைஎன்று கூறினார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.