சென்னை:
தீவிபத்தில் இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று முழுமையாக இடிக்கும் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்தில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, துயரமான இந்தச் சூழலிலும், தி.நகர் கிளையில் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் பட்டுவாடா செய்துவிட்டதாகவும், அவர்களை சென்னையில் உள்ள மற்ற கிளைக் கடைகளுக்கு பணிகளைப் பிரித்து வழங்கி அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 7 மாடிகளைக் கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில் புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 35 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. 250-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி சுமார் 30 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், கட்டடத்தின் முன்பகுதி முழுமையாக இடிந்து விழுந்தது. நேற்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு கூரைகள் சரிந்தன. அந்நேரம் கட்டடத்தில் விரிசல் அதிகமானது. அடுத்த 2 நிமிடங்களில் கட்டடத்தின் உள்பகுதி பயங்கர சத்தத்துடன் சரியத் தொடங்கியது. மேல் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை இடிந்து விழுந்ததால் அந்தப் பகுதி முழுவதும் தூசியுடன் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இதனால் கட்டடத்தை முழுமையாக இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பணி இன்று துவங்கி ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற இருப்பதால், பாதுகாப்பு பணிக்காக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர தீ விபத்தில் கடையில் இருந்து துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.