சாரல் பெய்யாததால் குற்றாலத்தில் அருவிகள் வறண்டு வருகின்றன. இதனால் சுற்றுலா
பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே குற்றால சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சரியான அளவு பெய்யாததால்
அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
சீசன் துவங்கி 2 மாதங்கள் முழுமையாக முடிந்த நிலையில் விரல் விட்டு
எண்ணிவிடக்கூடிய நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து
அருவிகளிலும் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் அருமையாக கொட்டியுள்ளது. மீதமுள்ள
நாட்களில் மிதமாக மட்டுமே கொட்டும் தண்ணீரில் குளிக்க குவியும் கூட்டமும்
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து குளித்துச் செல்லும் நிலை நிலவுகிறது.
இதனால் ஏமாற்றமடையும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவதை தவிர்த்து
வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக சாரல் மழை பெய்யாமல் கோடை போல் வெயில் கொளுத்தி வருவதால்
அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தடதடவென தண்ணீர் கொட்டும்
மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரத்தில் மட்டுமே சிறிதளவு தண்ணீர்
விழுகிறது. மெயினருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் புலியருவி முற்றிலுமாக
வறண்டு விட்டது. இதனால் புலியருக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்வதில்லை.
ஐந்தருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் 2 பிரிவுகளில் மட்டும்
ஓரளவு தண்ணீர் விழுகிறது. இதனால் சீசனை எதிர்பார்த்து வெகு தொலைவிலிருந்து
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். சுற்றுலா
பயணிகள் வரத்தும் குறைந்துவிட்டதால் அருவிக்கரை, கார் பார்க்கிங் பகுதிகள்,
பஜார் வெறிச்சோடி காணப்படுகிறது.