- Ads -
Home உள்ளூர் செய்திகள் மெரினாவில் குவிந்த போலீஸ்! மீண்டும் ஒரு குழப்பம் நேராமல் தடுக்க பாதுகாப்பில் கவனம்!

மெரினாவில் குவிந்த போலீஸ்! மீண்டும் ஒரு குழப்பம் நேராமல் தடுக்க பாதுகாப்பில் கவனம்!

IMG 20180331 WA0043

சென்னை: சென்னை மெரினாவில் வரலாறு காணாத அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், போராட்டம் என்ற பெயரில் பலரையும் சமூக வலைத்தளங்கள் மூலம் திரட்டக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும், போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப் படுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் சென்ற வருடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதன் பின்னர், மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி போன்றவை நடத்த போலீசார் தடை விதித்தனர். அதன் பின்னர், மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடந்த முயன்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மெரினா கடற்கரை என்பது, போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற செயல்களைத் தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் போலீஸாருக்கு கூறியது. இதை அடுத்து, மெரினாவில் போராட்டம் உள்ளிட்டவை நடைபெறாமல் தடுக்க போலீஸார் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மெரினாவில் போராட்டம் நடத்தப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் விடுக்கப்பட்ட அழைப்புகளை கவனித்து போலீஸாருக்கு தகவல் தெரியவந்தபோது, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர், சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்த மெரினாவில் காந்தி சிலை முன்பு திரண்டபோது, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கைகளில் பதாகைகள் ஏந்தி, மெரினா கடற்கரையில் நின்றபடி போராட்டம் நடத்துவது போல் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டனர். அவை டிவிக்களிலும் ஒளிபரப்பப் பட்டது. இதை அடுத்து போலீஸார், அவற்றை வைத்து போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்து பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுக்க சர்வீஸ் சாலை மூடப்பட்டது. அங்கு வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் மட்டும் வழக்கம் போல் மெரீனா கடற்கரைக்கு வந்து செல்லலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுக்க முனெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். 6 துணை ஆணையர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குதிரைப்படை போலீசாரும், கடற்கரை ரோந்து போலீசாரும் கடற்கரை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரை இன்று மாலை பரபரப்புடன் காணப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version