தூத்துக்குடி: ஸ்டெர்லைட் என்னிடம் டீல் பேச முயன்றது, ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,“தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டமும் நடந்து விடக் கூடாது என்பதைக் குறியாகக் கொண்டு சில சதிச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன. இதுபோல் கன்னியாகுமரியிலும் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குருஸ் பர்னாந்து சிலை அருகே பாஜக., சார்பாக 4 நாள் உண்ணாவிரதம் இருந்து முதலில் போராடியவன் நான். அப்போது எனக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினர். ஆனால் இப்போது பாதிப்பு என்றதும் அதே மக்கள் போராடுகின்றனர். அந்த ஆலை செயல்படுவது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்கியது இரு திராவிட கட்சிகளும்தான்!
நான் உண்ணாவிரதம் இருந்த போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் பேரம் பேசியது. அதற்கு நான் உடன்படவில்லை. பின்னர் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் செலவுக்கு பணம் அளிக்க முன்வந்தனர். அதையும் நான் நிராகரித்து திருப்பி அனுப்பினேன்.
இதுபோல கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடக்கத்தில் நான் போராடினேன். ஆனால் பல கோடி பணம் செலவழித்து விட்ட பின்னர் நிறுத்த முடியாது. திட்டம் வேண்டும் என்று அப்போது கூறினர். எனவே எந்த பாதகமான திட்டம் என்றாலும், அதனை மக்கள் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.