சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரும் வழக்கி, உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒருவரின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறப்பதற்கு திமுக., எதிர்ப்பு தெரிவித்தது. இதே கருத்தை முன்வைத்து, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டசபையில் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஏற்கனவே ஜெயலலிதாவின் உருவப்படம் அரசு நலத் திட்டங்களில் இடம்பெறக் கூடாது என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்தும் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.