சென்னை: மெரினாவில் ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த பின்னர், அது வன்முறையில் முடிந்ததால் சென்னை மெரினா கடற்கரை, போராட்டம் நடத்தத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டது. போராட்ட பதட்டம் நிலவும் போதெல்லாம், மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்படும். தடையை மீறி யாராவது போராட்டம் நடத்தினால், அவர்களை போலீஸார் கைதுசெய்து வந்தனர்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மோடியும் மத்திய அரசும் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரம் இருக்க அனுமதி கேட்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க இயலாது, அது கொள்கை ரீதியான முடிவு என்று போலீஸார் கூறினர். மேலும், மெரினாவை அடுத்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டம் நடத்த அரசு ஒதுக்கியிருப்பதாகவும், அங்கே போராட்டம் நடத்திக் கொள்ள அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி நீர் தமிழகத்துக்கு வருவது என்பதை விட, மெரினாவில் போராட்டம் மற்றும் மோடிக்கு எதிரான பிரசாரம் என்பதில் மட்டுமே குறியாக இருக்கும் அய்யாக்கண்ணு, விடாப்பிடியாக மெரினாவில் தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
இந் நிலையில், மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதுவும், 90 நாட்களுக்கெல்லாம் அனுமதிக்க இயலாது என்று கூறி, ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனறும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.