இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அண்மையில், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில், இஸ்லாமிய மதமாற்றம் மற்றும் வலுக்கட்டாய மத பிரசாரத்தை தடுத்த பாமக., நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப் பட்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்ட வீடியோவில், படுகொலைக்கான காரணம் முழுதும் வெளித் தெரிந்தது.
இந்நிலையில், ராமலிங்கம் படுகொலை வழக்கு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இண்டியா அலுவலகங்களில் என்ஐஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ராமலிங்கம் படுகொலை தொடர்பாக தமிழக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தமிழக போலீசார் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி மாற்றப்பட்டது. தொடர்ந்து ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு துறை ஏடிஎஸ்பி சௌகத் அலி தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் என்ஐஏ குழு திருச்சியில் பாலக்கரை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதன் காரணமாக பாலக்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், திருபுவனம் ராமலிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக கும்பகோணத்தில் உள்ள பழைய மீன் அங்காடி அருகிலுள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திலும், கே.எம்.எஸ் நகரில் உள்ள அப்துல் மஜீத் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைமை அலுவலகம், அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் குத்தூஸ் என்பவர் வீடு ஆகிய இடங்களிலும் என்ஐஏஅதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.