சென்னை ஆவடி அம்பத்தூருக்கு நடுவே உள்ள திருமுல்லைவாயல் அந்தோனி நகரில் வசித்து வரும் ராஜேந்திரன்- செந்தமிழ்ச்செல்வி தம்பதிக்கு கார்முகிலன் (வயது 7) சன்மதி (வயது 4) என இரு குழந்தைகள்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் கார்முகிலனை அருகில் டியூஷனுக்குக் கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார் செந்தமிழ்ச்செல்வி. பக்கத்தில் செல்வதால் செந்தமிழ்ச் செல்வி தனது மகளை வீட்டில் விட்டுவிட்டு மகனை டியூஷனில் விடுவதற்கு சென்றுவிட்டார். அப்போது, சிறுமி சன்மதி தனியாக வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாராம்.
ஆனால் வீடு திரும்பிய செந்தமிழ்ச்செல்வி தனது மகளைக் காணாமல் பதறியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். இதை அடுத்து தனது குழந்தையைக் காணவில்லை என்று திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வீடு திரும்பிய செந்தமிழ்ச்செல்வி மீண்டும் அக்கம்பக்கம் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார்.
பின்னர் குழந்தை வீட்டு பாத்ரூமில் கழிவறை வாளி அருகே ஒரு பிளாஸ்டிக் பையில் பையில் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
போலீஸார் வந்து வீடு வீடாக விசாரித்தனர். அப்போது ராஜேந்திரனின் வீட்டுக்கு அருகில் உள்ள மீனாட்சி சுந்தரம் வீட்டில் இருந்து அதிக அளவில் பினாயில் வாசனை வந்துள்ளது. இதனால் சந்தேகப் பட்ட போலீஸார், எதனால் என்று விசாரித்துள்ளனர். அந்த வீட்டில் இருந்தவர்களின் பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அந்த வீட்டுக்குள் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டின் படுக்கை அறையில் உடைந்த வளையல்கள், சிறுமியின் ஒரு கம்மல், ரத்தக் கறை படிந்த வேட்டி ஆகியவை இருந்தனைக் கண்டு அதிர்ந்தனர்.
அதுகுறித்து விசாரித்த போது, அங்குள்ளவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரித்த போது அந்த வீட்டில் உள்ள 60 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மீனாட்சிசுந்தரம் என்பவர் மீது போலீஸார் சந்தேகப் பட்டனர்.
இதையடுத்து, சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிறுமியின் சடலம் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து மீனாட்சிசுந்தரம் கைது செய்யப் பட்டார். இளம்பிஞ்சு என்றுகூடப் பாராமல், 60 வயது நிறைந்த ஒருவர் இவ்வாறு கொடூரச் செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தரம் முன்னாள் ராணுவ வீரர்! பொதுச் சேவைகளில் அதிகம் ஈடுபடுபவராம். எனவே பொதுமக்கள் அவருக்கு மரியாதை கொடுத்துள்ளனர். உள்ளூரில் செயல்படும் ஒரு சங்கத்தில் தலைவராகவும் சுந்தரம் இருக்கிறார். எனவே அந்தப் பகுதியில் எந்தப் பிரச்னை என்றாலும் சுந்தரம் முன்னிலையில் வருவாராம். அங்குள்ள பிரச்னைகளுக்காக திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கும் அடிக்கடி செல்வார் என்பதால், போலீஸாருக்கும் அவர் அறிமுகமானவர்தானாம். திருமுல்லைவாயல் கோயிலை அடுத்த தெருவில் அவரை அடிக்கடி பார்க்கலாம் என்று கூறும் உள்ளூர்வாசிகள், அவர் குறித்த இந்தத் தகவலால் தாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
கைது செய்யப் பட்ட சுந்தரத்துக்கு ஒரு மகன் உள்ளார். அவரது மகனும் மருமகளும் தனியாக குடியிருக்கின்றனர். சுந்தரமும் அவரது மனைவியும் இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். அதே நேரம், சுந்தரம் குறித்து கூறும் அப்பகுதியினர் சிலர், அவர் அவ்வாறு நடக்கக் கூடிய நபர் அல்ல என்றும், நாட்டுக்காகவும் பொதுச் சேவையிலும் ஈடுபாடு கொண்ட சுந்தரத்தை முடக்குவதற்காகவும், முன்விரோதம் காரணமாகவும் இந்த வழக்கில் அவரை சிலர் சிக்க வைத்துள்ளனர் என்கின்றனர்.