பெங்களூர்: ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்று வழக்கறிஞர் பவானி சிங்கிடம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வாதங்கள் முடிவடைந்து விட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய 6 தனியார் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. அந்நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த 3 நாட்களாக வாதிட்டனர். இந்த வாதத்தின் போது, வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா ரூ.66 கோடி குவித்ததாகக் கணக்கிட்டது எப்படி? இந்த அளவுக்கு சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன, அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு மதிப்பீடு செய்த சொத்து மதிப்பீடு பட்டியல் எங்கே? என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பவானி சிங், சாட்சிகளின் அடிப்படையிலும், குறிப்பிட்ட ஆவணங்களின் படியும் சொத்துக்களை மதிப்பீடு செய்தோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்களின் மதிப்பீடு பட்டியலை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார். அப்போது நீதிபதி, சொத்துக்களை மதிப்பீடு செய்தற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; இல்லையெனில் நானே மதிப்பீடு செய்வேன் என்று அரசு வழக்கறிஞர் மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.