விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் வெளியூர் பக்தர்கள் நலன் கருதி, தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கை ஆகும்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் ஊராட்சியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது.
சுவாமியிடம் வேண்டி, முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் நிறைவேறும் என்பது ஐதீகம். இதற்காக, வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் பலரும் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சத்தமின்றி வந்து செல்கின்றனர்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சட்டசபை தேர்தலுக்கு முன், கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரபலங்கள் பலரும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நலன் கருதி 1974ம் ஆண்டில், கோவில் வளாகத்தில் 10 அறைகளுடன் பக்தர்கள் தங்கும் விடுதி, அதிகாரிகள் விடுதியில் மூன்று அறைகளும் கட்டப்பட்டன.
பின், 2005ல் விடுதிகள் சீரமைத்து, பக்தர்கள் விடுதியில் முதல் தளம் அமைத்து கூடுதலாக 11 அறைகளும், அதிகாரிகள் விடுதியில் கூடுதலாக 3 அறைகளும் கட்டப்பட்டன.
இந்த வாடகை மூலம் விடுதி மின்கட்டணம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்தன. நாளடைவில் பராமரிப்பின்றி, தங்க லாயக்கற்ற நிலை ஏற்பட்டது.
இதனால் சமூக விரோதிகள் மது அருந்துவதும், போதை தலைக்கேறியதும், அங்குள்ள மின் விசிறிகள், தளவாடப் பொருட்கள், குடிநீர் பைப்புகளை உடைத்து சேதப்படுத்திச் சென்றனர்.
இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட விடுதிகள் காட்சிப் பொருளாக மாறின. தற்போது, விடுதி கட்டடத்தில் ஆங்காங்கே சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. விடுதி கட்டடம் நல்ல நிலையில் இருப்பதால், குறைந்த செலவில் புனரமைக்க முடியும்.
மேலும் தலைமுடி காணிக்கை செலுத்தும் கட்டட மேற்கூரை பெயர்ந்து, மர நிழலில் காத்திருக்கின்றனர். கழிவறை, குளியலறை கட்டடங்கள் சேதமானதால் வெளியூர் பக்தர்கள் பாதிக்கின்றனர். கோவிலில் நடக்கும் திருமணங்களுக்காக அறநிலையத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதில், மண்டபம் வாடகைக்கு எடுக்கும் நபர்கள் தங்க போதிய வசதியின்றி தனியாரிடம் செல்லும் அவலம் உள்ளது. மேலும் கோவிலில், உண்டியல் காணிக்கை உட்பட பலவற்றில் அதிக வருமானம் வருகிறது.
இருப்பினும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. பக்தர்கள் நலன் கருதி தங்கும் விடுதி, குளியலறை, கழிவறை, தலைமுடி காணிக்கை செலுத்துமிடத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, மன நிம்மதியுடன் வேண்டுதலை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.