ஆபத்தான பயணங்களை தடுக்க, இந்தியன் ரயில்களில் பயோமெட்ரிக் டோகன் முறை நடைமுறைபடுத்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது!
தொலைதுார பயணங்களில் பயன்படுத்தப்படும் ரயில்களில் பொதுவாக 3 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
பொது மக்களின் வசதிக்கேற்ப பொதுப்பெட்டிகளில் பயணக்கட்டணம் மிகவும் மலிவாக இருப்பதால், எப்போதும் இந்த பெட்டிகளில் கூட்ட நெருக்கடி அதிகமாக இருக்கும்.
பொதுப்பெட்டிகளிலும் கூட்டம் நெருக்கடி ஏற்படும் சமயங்களில் வாசலில் அமர்ந்தும், ரயிலின் கூரை மீது ஏறியும் ஆபத்தான பயணம் செய்பவர்களும் உண்டு.
இதனை முடிவுக்கு கொண்டுவர இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய முறையை கையாண்டுள்ளது.
பொதுப்பெட்டியில் இனி பயணம் செய்ய வருபவர்களின் கைரேகையை பெற்று பயோமெட்ரிக் கருவி மூலம் ஒரு டோக்கன் வழங்கப்படும்.
அதன் டோக்கன் அடிப்படையில், பெட்டியின் கதவு திறந்த உடன், பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் பெட்டியின் உள்ள இருக்கைகளுக்கு தகுந்தவாறு பயணிகள் பெட்டியினுள் அனுமதிக்கப்படுவர் எனவும், இதன் மூலம் ஆபத்தான பயணங்களை தடுக்க முடியும் எனவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
டோக்கன் பெறும் பயணிகளின் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கான பயணச்சீட்டும் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டமானது மும்பை – லக்னோ இடையே பயணிக்கும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிற நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வழக்கமான முன்பதிவு மூலம் பயணச்சீட்டு பெறும் பெட்டிகளுக்கு, வழக்கமான முறைப்படியே பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்பதால், முன்பதிவு பெட்டிகளில் இனி சீட் கிடைப்பது கேள்விகுறி தான்…