- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சுபாஷிதம்: அந்த ஒன்பது ரகசியங்கள்!

சுபாஷிதம்: அந்த ஒன்பது ரகசியங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

16. ஒன்பது ரகசியங்கள்.

செய்யுள்:

ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமௌஷதம்|

தபோ தானாவமானே ச நவ கோப்யானி காரயேத்||

– ஹிதோபதேசம்.

பொருள்:

வயது, வருமானம், வீட்டுக் கலகம், தனிப்பட்ட ரகசியங்கள், மந்திரம், மருந்து, தவம், தானம், அவமானம் – இந்த ஒன்பது விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.

விளக்கம்:

சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருந்தால்தான் மனித கௌரவம் நிலைக்கும். வெளியில் யாரிடமும் கூறக் கூடாத ஒன்பது விஷயங்களைப் பற்றி இந்த சுலோகம் விவரிக்கிறது. நாம் பிறரோடு வெளிப்படையாக விவாதிக்க கூடாதவற்றுள் முதலாவது நம் வயது. நம் வரவு செலவு, வருமானம் போன்ற பொருளாதார விஷயங்களை அனாவசியமாக பிறரிடம் ஒப்புவிப்பது தவறு. பணம் இருப்பது தெரிந்தால் கடன் கேட்பார்கள். கடன் இருப்பது தெரிந்தால் விலகிச் செல்வார்கள். அதே போல் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறிய, பெரிய குடும்பக் குழப்பங்களை தேவையில்லாமல் பிறரிடம் கூறினால் அது நான்கு சுவர்களைத் தாண்டி வீதிக்குச் செல்லும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறது இந்த ஸ்லோகம்.

அதேபோல் நண்பர்கள் என்று எண்ணி சம்சார ரகசியங்களையோ குடும்ப ரகசியங்களையோ கூறிவிட்டால் பின்னர் அதே நண்பர்கள் பகைவர்களாக மாறும் போது, என்ன ஆகும்? எப்போது நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்ச நேரிடும். எச்சரிக்கை தேவை என்கிறது ஸ்லோகம்.

அதேபோல் நமக்கு குருமார்கள் உபதேசித்த மந்திரத்தை வெளியிடக்கூடாது. அடுத்தது மருந்து. நமக்கு இருக்கும் நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள் பற்றி பிறருக்குக் கூறவேண்டிய தேவையில்லை. அதை கேட்பவர்கள் ஆளுக்கொரு அறிவுரை கூறுவர். இவ்விதம் பகிரங்கமாக வெளிப்படுத்தக்கூடாத அம்சங்கள் பற்றி நம் கலாச்சாரத்தில் மிகவும் கவனமாக எடுத்துரைத் துள்ளார்கள். கேட்டு நடப்பது நம் கடமை.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version