பிரம்ம வித்யா ஸ்வரூபிணியாக விளங்குகின்ற ஸ்ரீ சாரதா பரமேஸ்வரி அகில லோக நாயகி. ஸ்ரீ சாரதை முழு முதல் இறைவி.
ஸ்ரீ தஷிணாமூர்த்தி அல்லது ஸ்ரீ சாரதையின் அம்சாவதாரமான ஸ்ரீ சங்கரர், சிருங்ககிரியில் ஸ்ரீ சாரதைக்கு கோயில் எழுப்பினார். அனுதினமும் நினைப்பவர்க்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் இந்த ஜன்மத்திலேயே அடையும்படி அனுக்ரஹம் செய்பவளே, துங்கா நதிக்கரையில் உள்ள சிருங்ககிரி ஸ்ரீ சாரதாம்பாள்.
ஸ்ரீ சாரதாம்பாளின் சாந்நித்யம் மிகுந்த சிருங்ககிரிக்கு எண்ணற்ற பக்தர்கள், ஷேத்ராடமாகவந்து, ஸ்ரீ சாரதாம்பாளின் அருள்பெற்றும், துங்கா நதியில் நீராடி, புனித ஸ்நானப் பேறு பெற்றும் செல்வது மரபாகிவிட்டது. ஸ்ரீ சாரதையின் சாந்நித்யம், மெய்ப்பாட்டுடன், சிரத்தை மிகுந்த பக்தியுடன் துதிப்பவர்களுக்கு சகல சுபிட்சங்களையும் அளிக்க வல்லது.
ஸ்ரீ சாரதாம்பாளை ஸ்ரீ சங்கரர் தாயாக தரிசனம் செய்தார். ஸ்ரீ சாரதையின் சரணாரவிந்தங்களில் பணிந்து பக்திப் பரவசம் எய்தினார். தாயாக வந்து, தாயாகிக் கருணை சுரந்து, அருள் பாலிக்கும் ஸ்ரீ சாரதாம்பாள் திருமுன்னர் நின்று துதி பாடினார். ஸ்ரீ சங்கரரின் இதயத் தாடகத்தில்தேவி சாரதையின் அருள் கடாஷம் பிரவாஹமெடுத்துப் பாய்ந்தது.
வாக்தேவியின் அனுக்ரஹத்தால் ஸ்ரீ சங்கரர், தேவியை பிரத்யஷமாகத் தரிசனம் புரிந்தவாறே ” ஸுவக்க்ஷோஜகும்பாம், ஸுதாபூர்ண கும்பாம் ”
” பஜே சாரதாம்பாமஜஸ்ரம் மதம்பாம் ” ..( சாரதா புஜங்கம் ஸ்தோத்திரம் ) என்று நிறைவுறும் முதல் பகுதியின் தெய்வீக ஒலியுடன் இழைந்தவாறே காற்றுடன் தவழ்ந்து ஸ்தோத்திரத்துடன் இணைவது போல் ஒரு நாத ஒலி.
அந்த நாத ஒலி வீணாகானம் தான்.
பண்டையயாழ் என்னும் விணையின் இசையோ?
நாரதரின் ‘ மஹதி ‘ என்ற வீணையிலிருந்து உண்டாகிற உன்னத ஒலியோ!
சங்கரரின் தோத்திர கவித்வங்களுடன் பின்னிப் பிணைந்தவாறு வீணை இன்பநாதம் கணந்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறதே!
காண்டக வீணையின் காந்த ஒலியோ!
மாணிக்க வீணையின் மதுர கானமோ!
தாளமொர் வீணையின் சங்கீத நாதமோ!
பண்ணார்ந்த வீணையின் பரவச ஒலியோ!
மாசில் வீணையின் மங்காத நாத ஒலியோ!
வித்தக வீணையின் வியத்தகு இசை ஒலியோ!
எத்தனை வீணைகள்: எத்தனை வீணைகள்:
என்னே, வீணா கானம்!
காலைக் கதிர் பரப்பும் கவின்மிகு கிரணங்கள் போல், சரஸ்வதியின் ‘ கச்சபி ‘
வீணையிலிந்து எழுந்து, வரும் கானம் தான் அது. தெய்வீக உணர்வு ஊட்டுகிற வீணை மீட்டுகிற அந்த நாதநயம் கூட்டுகிற அமுதப்பொலிவு: அம்மம்மா! அற்புதம், அற்புதம்!
” என் தாயாகும் சாரதாம்பாளை, மனம் மொழி மெய் சேர சந்ததமும் துதிக்கிறேன்” என்று தோத்திரம் செய்ததும் ஸ்ரீ சங்கரரின் வாக்குக்கு வளம் சேர்ப்பது போன்று அந்த வீணா கானம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வாக்தேவி வாணி சரஸ்வதி, அவள் நானாவிதக் கலைகளில் நாயகி; வீணாதாரிணி. ஸ்ரீ சாரதையே ஒரு வீணை தான். வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறாள், தேவி சரஸ்வதியாம் ஸ்ரீ சாரதை. பக்திப் பூர்வமாக தோத்திரப் பாமாலை சூட்டிக் கொண்டிருக்கிறார், ஸ்ரீ சங்கரர் ஸ்ரீ சாரதாம்பாளுக்கு.
அந்த வீணையின் நாத ஒலியிலும் அம்பாள் ஸ்ரீ சாரதையின் அருள் பார்வையிலும் எழுந்து நாற்திசைகளிலும் பரவுகிற தெய்வீகம், அந்த சிருங்ககிரி ஷேத்திரத்தை மட்டுமின்றி, ஜகம் முழுவதையும் புனிதப்படுத்தி ரஷித்துக் கொண்டே இருக்கிறது.
ஜகம் முழுவதையும் காத்தருளும் குரு ஸ்வரூபிணி ஸ்ரீ சாரதாம்பாள், பூரணமாக, சகல வித்யைகளையும் அனைத்து சுபிட்சங்களையும் சர்வ மங்களங்களையும் சர்வ பொழுதுகளிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
பக்தர்கள் பிரார்த்திக்கின்ற அனைத்தையும், அவர்கள் வேண்டியவண்ணம் அனுக்கிரகிப்பவள் ஸ்ரீ சாரதாம்பாள் என்கிறது இந்த ஸ்லோகம்.
‘யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீ
க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |
அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி
வித்யோத்தேண்பீஷ்டவரான் திசந்தி ||’
சாரதாம்பாள் என்கிற திருநாமத்தைக் கொண்டு துலங்குபவள்; தாம் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி வருபவள்; இன்றும் சிருங்கேரியில் வாசம் செய்பவள்; அவள் பக்தர்கள் பிரார்த்திக்கும் அனைத்தையும் அருள்பவளாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள் என்பது இதன் பொருள்.
கண்களைக் கவர்கிறது அம்பிகையின் அமர்ந்த திருக்கோலம். பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்கள். சின்முத்திரை, ஜபமாலை, கெண்டி, ஏடு ஆகியவை தேவியின் திருக்கரங்களை அலங்கரிக்கின்றன.
திருமேனியில் பல்வேறு ஆபரணங்களைத் தரித்திருக்கிறாள். மலர் மாலைகள் அன்னையை அடைந்த நிறைவை வெளிப்படுத்துகின்றன. அம்பிகையின் நயன நதிகளிலிருந்து அருள் வெள்ளம் பிரவாகித்து வழிகிறது. சிரசில் சந்திரகலை ஒளிர்கிறது. இந்தத் திருக்கோலமே அன்னை சகல வித்யா ஸ்வரூபிணி, ஞானஸ்வரூபிணி என்பதை புலப்படுத்துகிறது.
அன்னை சாரதையின் பாத கமலங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.
நன்றி: whatsup