பர்மிங்காம்:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 124 ரன் வித்தியாசத்தில் வென்று தனது வெற்றிக் கணக்கைத் துவக்கியது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வெற்றியுடன் துவக்கிய இந்திய அணி இரண்டு புள்ளிகளை முழுமையாக பெற்றது. இந்த வெற்றியை எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முதல் சாமான்ய இந்தியன் வரை விடியவிடிய கொண்டாடி மகிழ்ந்தனர்.
முன்னதாக, முதலில் இந்திய அணி ஆடிய போது மழை குறுக்கிட்டதால், இரு முறை தடைப்பட்டது. இதை அடுத்து போட்டி 48 ஓவர் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் முதலில் ஆடிய இந்திய அணி 48 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்தது. ரோஹித்சர்மா 91 ரன், கோலி 81 ரன், தவான் 68, யுவராஜ் 53 ரன் குவித்தனர். கோலி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதை அடுத்து பாகிஸ்தான் அணி 320 ரன் இலக்குடன் விளையாடத் தொடங்கியது. அப்போது மழை குறுக்கிட்டதால், இலக்கு மாற்றப்பட்டது. பின்னரும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அந்த அணி, 164 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அணியில் அதிகபட்சமாக அசார் 50 ரன் எடுத்தார்.
போட்டி குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் கோலி, இது யுவராஜின் அதிரடிக்குக் கிடைத்த வெற்றி என்றார்.