இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று லக்னோவில் பாதரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கா, குசல் மெண்டிஸ், மகேஷ் தீக்ஷனா ஆகியோர் இன்று விளையாடவில்லை. இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹார் மூவரும் காயம் காரணமாக விளையாடவில்லை. எனவே இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ரவீந்தர் ஜதேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் விளையாடினர்.
பூவா தலையா வென்ற இலங்கை அணி இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. இந்திய அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினர். 32 பந்துகளில் 50 ரன், 62 பந்துகளில் 100 ரன்; 98 பந்துகளில் 150 ரன்; 120 பந்துகளில் 199 ரன் என ஏறத்தாழ ஒரு ஓவருக்கு 10 ரன் வீதம் எடுத்தனர். ரோஹித் ஷர்மா (32 பந்துகள், 42 ரன்), இஷான் கிஷன் (56 பந்துகள் 89 ரன்) ஸ்ரேயாஸ் ஐயர் (28 பந்துகள் 57 ரன்) சிறப்பாக விளையாடினர்.
பின்னர் விளையாட வந்த இலங்கை அணியால் ரன்ரேட் பராமரிக்க முடியவில்லை. சரித் அசலங்கா (53 ரன்) சமிகா கருணரத்னே (21 ரன்), துஷ்மந்தா சமீரா (24 ரன்) ஆகியோரைத் தவிர ஏனையோர் சரியாக விளையாடவில்லை.
ஃபீல்டிங், பந்து வீச்சு, பேட்டிங் என மூன்று துறைகளிலும் இந்தியா சிறப்பாக விளையாடி முதல் டி20 போட்டியை 62 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியைத் தோல்வியுறச் செய்தது. இஷான் கிஷன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.